Tamilnadu

பா.ஜ.கவினரின் தாக்குதலில் காயமடைந்த பியூஷ் மனுஷ் மீது வழக்குப்பதிவு-ஆளுங்கட்சிகளின் தூண்டுதலால் அராஜகம்!

பா.ஜ.க ஆட்சியின் குளறுபடிகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புவோர் மீதும் சுட்டிக்காட்டுபவர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் பெரும்பாலும் விட இந்தியாவில் நிகழ்ந்துவந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் தலைதூக்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், பா.ஜ.க ஆட்சியில் நடக்கும் குளறுபடிகள் குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அவர் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் பா.ஜ.க அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் ஜம்மு காஷ்மீர் விவகாரம், ஆர்.பி.ஐ வங்கியிடம் இருந்து கடன் பெற்றது, பொருளாதார சரிவு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளை அடுக்கினார் பியூஷ் மனுஷ். இந்த கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க முடியாத பா.ஜ.க நிர்வாகிகள் அவரை மிரட்டி, தரக்குறைவாகப் பேசி அவர் மீது தாக்குதல் நடத்தினர்

பா.ஜ.க-வினரின் இந்தத் தாக்குதலால் காயமடைந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த பியூஷ் மனுஷை அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள். மேலும் பா.ஜ.க-வினரின் இந்தத் தாக்குதலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சேலம் பா.ஜ.க மாவட்ட செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் பியூஷ் மனுஷ் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் (147), அத்துமீறி நுழைதல் (447), தாக்குதல் (323) அரசை அவதூறாக பேசுதல் (124), கூட்டுசதி செய்தல் (120பி) உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல தன்னைத் தாக்கியதாக பா.ஜ.கவினர் மீது பியூஷ் மனுஷ் கொடுத்த புகாரின் பேரில், பா.ஜ.க-வினர் 10 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் (147), தாக்குதல் (323), அவமானப்படுத்துதல் (356) ஆகிய பிரிவுகளின் கீழ் அஸ்தம்பட்டி போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பியூஷ் மனுஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர் மீது வழக்கு போடுவது எந்தவிதத்தில் நியாயம் எனக் கேள்வியெழுப்பி, குற்றவாளிகள் மீது பதியவேண்டிய வழக்குகளை பியூஷ் மனுஷ் மீது பதிவு செய்துள்ளதாகவும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.