Tamilnadu

“சிலை கடத்தல் வழக்கில் அரசு மோசமாக நடந்துகொள்வது ஏன்?” : நீதிபதிகள் கேள்வி!

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதிட வேறொரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்கவேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது.

சிலைக் கடத்தல் வழக்கு விசாரணைக்காக கும்பகோணம் நீதிமன்றத்திற்குச் செல்லும் அதிகாரிகளுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்று பொன் மாணிக்கவேல் புகார் தெரிவித்தார்.

சிலை கடத்தல் வழக்குகளின் முதற்கட்ட விசாரணையை சிறப்பு அதிகாரியின் குழு நடத்த கூடாது என்றும், அவர்களுக்கு வழக்கின் ஆவணங்களை கொடுத்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என ஆய்வாளர்களை ஏடிஜிபி ஒருவர் மிரட்டுவதாகவும், பொன் மாணிக்கவேல் வேதனை தெரிவித்தார்.

மேலும், ஜனவரி முதல் தற்போது வரை சிலைக் கடத்தல் தொடர்பான புகார்களில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரிய அரசு தரப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அரசு தரப்பு தவறாக நடந்துகொள்வது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டும், சிறப்பு அதிகாரி குழுவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலக துப்புரவு பணியாளர்களுக்குக் கூட அரசால் ஊதியம் வழங்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி முதற்கட்ட விசாரணை நடத்துவதை ஏடிஜிபி எவ்வாறு தடுக்கமுடியும் என சாடிய நீதிபதிகள், இந்த வழக்கில் அரசின் கொள்கையை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் உயர் காவல் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றுத்தான் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.