கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் மாணவி கவுசல்யா  
Tamilnadu

சாதிப் பெயரைக் கூறி திட்டிய பேராசிரியர்: ஆசிட் குடித்த மாணவி- அதிர்ச்சித் தகவல்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை அருகே ஆலமன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் கவுசல்யா (வயது 23). இவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் எம்.எஸ்சி படிப்பை முடித்து விட்டு அரசினர் ஆடவர் கல்லூரியில் எம்.பில் எனப்படும் இளமுனைவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இவருடைய ஆய்வு வழிகாட்டியாக பேராசிரியர் ரவிச்சந்திரன் என்பவர் இருந்து வருகிறார். மாணவி கவுசல்யா தனது ஆய்வுக் கட்டுரையை பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் சமர்ப்பித்து உள்ளார். அப்போது ஆய்வு கட்டுரையை பேராசிரியர் ஏற்றுக்கொள்ளாமல் மாணவியை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் மாணவி சென்று விளக்கம் கேட்டு பேசியுள்ளார். அப்போது திடீரென மாணவியை பேராசிரியர் ரவிச்சந்திரன் சாதி ரீதியாக திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி கவுசல்யா நேற்று கல்லூரி ஆய்வகத்தில் இருந்த ஆசிட் எனப்படும் அமிலத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்த மாணவியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாணவியின் தாய் ஜோதி கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் சாதி பெயரை கூறி தனது மகளை திட்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.