Tamilnadu

ஊடக சுதந்திரத்தைக் காக்கவேண்டிய ‘பிரஸ் கவுன்சில்’ அதை படுகுழியில் தள்ளிவிட்டது : என்.ராம் பாய்ச்சல்!

காஷ்மீர் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையை ஆதரிக்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ஜனநாயக விரோத செயல்பாட்டுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சென்னை நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இந்து குழும தலைவர் ராம், '' ஊடக சுதந்திரத்தை அரசு பறித்துவிட்டது. ஊடக சுதந்திரத்தைக் காக்கவேண்டிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அதை படுகுழியில் தள்ளிவிட்டது. பிரஸ் கவுன்சில் தலைவர் முறையாகச் செயல்படவில்லை. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயல்பாடு ஏற்கமுடியாத ஒன்று; அந்த அமைப்பின் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். அந்த அமைப்பு பல் இல்லாத சிங்கமாக உள்ளது. எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பாக இருக்கிறது.

காஷ்மீரில் அரசு ஜனநாயகத்தை நசுக்கியுள்ளது. அங்கு நடப்பதை உலகம் அறிய அங்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம். நான்கு பேர் கொண்ட குழுவை காஷ்மீருக்கு அனுப்ப பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தற்போது முடிவெடுத்துள்ளது முதல் வெற்றி'' எனத் தெரிவித்துள்ளார்.