Tamilnadu
“வாழும்போதுதான் கொடுமை என்றால், இறந்த பிறகும் இந்த அவலமா?” : கி.வீரமணி வேதனை!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்தும் சுடுகாட்டுக்குச் செல்லும் வழி அடைக்கப்பட்டதால், பாலத்திலிருந்து சடலத்தை இறக்கி அடக்கம் செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.
இந்நிலையில், தாழ்த்தப்பட்டவர்களின் சடலங்கள் கூட மரியாதையுடன் எரியூட்டப்படக் கூடாதா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆசிரியர் கி.வீரமணி இன்றுவெளியிட்ட அறிக்கையில், “வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள நாராயணகுப்பம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
அவரது சடலத்தை அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் எரியூட்ட எடுத்துச் செல்ல முடியாதபடி, அச்சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பாதையையும் மற்றவர்கள் ஆக்கிரமித்து, சடலங்களை சுமந்து சென்று எரியூட்ட வழி இல்லாமல் செய்ததால், தொட்டில் ஒன்று கட்டி, 20 அடி உயரமுள்ள கட்டப்பட்ட பாலத்திலிருந்து அச்சடலத்தைத் தொட்டிலிலிருந்து இறக்கி, பிறகு ஈமச் சடங்குகள் செய்தார்கள். இது சில மாதங்களாகவே தொடருகின்றது என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய செய்தியாகும்.
பெரியாரின் திராவிட மண்ணிலா?
இந்த 21-ம் நூற்றாண்டில், அதுவும் தமிழ்நாட்டில், பெரியாரின் திராவிட மண்ணிலா இப்படிப்பட்ட அநாகரிக ஆக்கிரமிப்புகள். வாழும்போதுதான் கொடுமை என்றால், இறந்த பிறகாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கண்ணியமாக, பிரச்னையின்றி எரியூட்டப்பட வேண்டாமா?
வேலூர் மாவட்ட நிர்வாகம் இதனை உட னடியாக சரி செய்தாக வேண்டும். வேலூர் மாவட்ட ஆட்சியர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உறுதி கூறியுள்ளது ஆறுதலானதும், மிகவும் வரவேற்கத்தக்கதும் ஆகும்.
வேலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று சந்தித்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும். இதுபோல் சுடுகாட்டுக் கொடுமைகளை எதிர்த்து மனிதநேய போராட்டம், அறப்போரில் ஈடுபட கழகம் தயங்காது. தலைமை அனுமதி பெற்று ஈடுபடவேண்டும். இது மிகமிக முக்கியம், அவசரம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!