Tamilnadu

சுடுகாட்டில் வைத்து ரவுடியை வெட்டிக்கொன்ற கும்பல் : சினிமா பாணியில் பழிக்குப் பழி தீர்க்க கொலை ?

சென்னை ஐயப்பன்தாங்கல் பெரிய கொளுத்துவாஞ்சேரியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற ரவுடி போரூர் அருகே உள்ள சுடுகாட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.

நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 20) காலை வீட்டை விட்டுச் சென்ற வசந்த்குமார், அதன் பிறகு வீடு திரும்பாததால் கவலையுற்ற அவரது மனைவி வனிதா பல இடங்களில் கணவரைத் தேடியுள்ளார்.

ஒருநாளுக்கு மேல் ஆகியும் வீடு வந்து சேராததால் மது அருந்துவதற்காக வசந்தகுமார் வீட்டுக்கு அருகே உள்ள சுடுகாட்டுக்கு வழக்கமாக செல்வதால் அங்கு சென்று பார்த்த மனைவி வனிதா அதிர்ச்சியடைந்துள்ளார்.

சுடுகாட்டின் தகன மேடைக்கு அருகே உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வசந்தகுமாரின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியான வனிதா மாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார், உடலெங்கும் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த வசந்தகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணை மேற்கொண்டதில், கடந்த மார்ச் 31ம் தேதி போரூர் ஏரியில் ராகேஷ் என்ற லாரி டிரைவர் கொலைசெய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் வசந்தகுமாரும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒரு மாதத்துக்கு முன்புதான் வசந்தகுமார் ஜாமினில் வெளிவந்துள்ளார்.

ராகேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக அவரது கூட்டாளிகள் வசந்தகுமார் வெளியே வந்ததை அறிந்து ஸ்கெட்ச் போட்டு அவரை கொலை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக உயிரிழந்த வசந்தகுமார் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி, கொலை முயற்சி என பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனையடுத்து போலிஸ் தரப்பு கூறுகையில், மோப்ப நாய் உதவியுடன் சுடுகாட்டில் ஆய்வு செய்து பார்த்ததில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றும், மோப்ப நாய் டைசன் சென்ற இடம் இருசக்கர வாகனம் செல்லக்கூடிய வகையில் இருந்ததால் பைக்கில் வந்து கொலை செய்திருக்கக் கூடும் எனச் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சுடுகாட்டு அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.