Tamilnadu

டீ, காபி விலை 2 ரூபாய் உயரும் அபாயம் : பால் விலை உயர்வுதான் காரணம் - தேநீர் கடைக்காரர்கள் அதிருப்தி !

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த விலையேற்றத்தை குறைக்க வேண்டி வலியுறுத்தி வருகின்றனர்.

பால் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என அரசு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அறிவித்துள்ளது. மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று முதல் பால் விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆவின் பாலை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தியுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் டீ, காபி விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டீக்கடைக்காரர்கள் சென்னையில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் பேசிய சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்தன், பல டீ கடைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பால் விலை உயர்வு அதிருப்தி அளிக்கிறது.

இதனால் டீ, காபி விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி டீ, காபி விலையை 2 ரூபாய் அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த விலை உயர்வால் வியாபாரம் பாதிக்கப்படுமா என்ற அச்சமும் உள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.