Tamilnadu
“சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த புதுச்சேரி பெண்”- சென்னை விமான நிலையத்தில் கைது!
தமிழகத்தில் பழமையான ஐம்பொன் சிலைகள் கடத்தல் விவகாரம் குறித்து விசாரணை செய்ய பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நியமனத்தின் படி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனைகளை நடத்தியும் வருகிறார். தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா வனினா ஆனந்தி என்கிற பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் சென்னை விமான நிலையத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின்போது மரிய தெரசா வனினா ஆனந்தி வீட்டில் இருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து திருட்டுத்தனமாக பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி ஓடிய மரிய தெரசா வனினா ஆனந்திக்கு சென்னை உயர்நீதி மன்றமும், டெல்லி உச்சநீதிமன்றமும் ஜாமீன் தர மறுத்தது. மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உள்துறை அமைச்சகம் மரிய தெரசா வனினா ஆனந்திக்கு எதிராக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது
இதனிடையே, பிரான்ஸில் இருந்து துபாய் வழியாக நேற்று சென்னை வந்த மரிய தெரசாவை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர் போலீசாரால் தேடப்பட்டு வருவதை அறிந்து உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனே சென்னை விமான நிலையம் வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மரிய தெரசாவை கைது செய்தனர். அவரிடம் இன்று சிலை கடத்தல் பிரிவு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
-
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!