Tamilnadu

புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்த பெண்ணுக்கு உதவிய இன்ஸ்பெக்டர் - அதிர்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் !

புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால், அங்கிருந்து தமிழகத்துக்கு மது மற்றும் சாராயக் கடத்தல் மறைமுகமாக நடந்து வருகிறது. இந்த கடத்தலை தடுக்க, மது விலக்கு அமல் பிரிவு காவல் துறையினர், புதுச்சேரி தமிழகம் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து வாகன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு நேற்று நடந்த வாகன சோதனையில், சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த கார் ஒன்றை போலிஸார் மடக்கியுள்ளனர். வாகனத்தை போலிஸார் நிறுத்துவதை பார்த்த காரின் ஓட்டுநர், திடீரென இறங்கி தப்பித்து ஓடினார். பின் நடத்தப்பட்ட சோதனையில் அந்த காரில், 148 மது பாட்டில்களும், 30 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்து பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. சமுத்திரக்கனி என்கிற அந்த பெண், நீண்ட நாட்களாக புதுச்சேரியில் இருந்து மது கடத்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இடையில், கடலூர் காவல் கட்டுப்பாட்டு துறையில் பணியாற்றி வரும் ஆய்வாளர் சுந்தரேசனுடன், சமுத்திரக்கனிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடத்தல் தொழிலுக்கு, சுந்தரேசனை உதவுமாறு கேட்டுள்ளார் சமுத்திரக்கனி. அதற்கு ஆய்வாளரும் சம்மதித்துள்ளார். அதன்படி இருவரும் புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரும்போது தான் போலிஸிடம் சிக்கியிருக்கிறார்கள். தப்பித்து ஓடிய சுந்தரேசனை போலிஸ் தீவிரமாக தேடி வருகிறது.

மது கடத்த காவல் ஆய்வாளரே துணையாக இருந்ததை அறிந்து, போலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.