Tamilnadu

பெற்ற தாயின் உடலை இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாததால் குப்பையில் வீசிய மகன் - தூத்துக்குடியில் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் தனசேகரன் நகருக்கு அருகே உள்ள குப்பைத்தொட்டியில் ஒரு மூதாட்டியின் சடலம் கிடந்ததை கண்டு சிப்காட் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், உயிரிழந்த பெண்மணி தனசேகரன் நகரைச் சேர்ந்த 55 வயதுடைய வசந்தி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோவிலில் பூசாரியும், வசந்தியின் மகனுமாகிய முத்து லட்சுமணனிடம் விசாரித்த போது, உடல்நலக் குறைவால் உயிரிழந்த தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு பணம் இல்லாததால் உடலை குப்பைத்தொட்டியில் வீசியதாக தெரிவித்திருக்கிறார்.

முத்துலட்சுமணின் வாக்குமூலம் உண்மை தானா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.