Tamilnadu

“எங்க போய் முடியப்போகுதோ தெரியலையே..!” : கனமழை பெய்யும் என வெதர்மேன் எச்சரிக்கை!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மேற்குப் பகுதி, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக, மண் சரிவு, வெள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுமார் 50 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் பிரதீப் ஜான் ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள அவர், ஊட்டி, குன்னூர் மற்றும் கோவையின் சில பகுதிகளில் கன மழை பெய்யும் எனக் கூறியுள்ளார்.

குன்னூரில் இந்த மாதம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், கேரளாவின் மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

கனமழை எச்சரிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நான்காவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.