Tamilnadu

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் தொழிலதிபரை கடலில் வைத்து கொலை செய்த பெண் வழக்கறிஞர் கைது !

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ் எனும் தொழிலதிபர். 50 வயதான இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். திடீரென கடந்த ஜூன் மாதம் சுரேஷ் பரத்வாஜ் காணாமல் போனதால், அவரது உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்தனர்.

காணாமல் போன சுரேஷ் பரத்வாஜின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அவர், காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடிகளையும், பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா என்பவரையும் தொடர்புகொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவரது செல்போனை அவரது டிரைவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

பிரபல ரவுடிகளான குடுமி பிரகாஷ், சுரேஷ், மனோகர் ஆகிய மூவரையும் பிடித்து போலீசார் விசாரித்தபோது, தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜை கடலுக்குள் கடத்தி சென்று ஆழ்கடலில் வைத்து கொலை செய்து உடலை கடலில் வீசியது தெரியவந்தது. கொலைக்குக் காரணமான பகீர் பின்னணி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுரேஷ் பரத்வாஜ் தனது வீட்டில் வேலை செய்துவந்த ஒரு பெண்ணை விரும்பியுள்ளார். அப்பெண்ணுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடனாக அளித்துள்ளார். அவரது ஆசைக்கு அந்தப் பெண் இணங்காததை அடுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு அந்தப் பெண்ணை மிரட்டியதால் அவர் வேலையை விட்டு நின்றுள்ளார்.

பின்னர், பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா என்பவர், பரத்வாஜ் மீது பணிப்பெண் புகார் செய்திருப்பதாகவும், அதிலிருந்து விடுவிக்க ரூ. 65 லட்சம் செலவாகும் என்று பொய் சொல்லி பரத்வாஜிடம் இருந்து பணத்தைப் பெற்றுள்ளார்.

ப்ரீத்தாவிடம் பணத்தைத் திருப்பித் தரும்படி பரத்வாஜ் கேட்டுள்ளார். இதனால், அந்தப் பெண் வழக்கறிஞர் ஆறு குண்டர்களை அமர்த்தி பரத்வாஜை கொலை செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பெண் வழக்கறிஞர் ப்ரீத்தாவை தேடி வந்தனர். கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த ப்ரீத்தாவை அடையாறு போலீசார் கைது செய்தனர்.