Tamilnadu

போதையில் உயிர் நண்பனையே அரிவாளால் வெட்டிய நபர் : புதுக்கோட்டையில் பயங்கரம்!

புதுக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவி. இவரும் இம்மனாம்பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரும் நெருங்கிய நண்பர்கள்.

இன்று காலை புதுக்கோட்டை கீழ 3ம் வீதியில் ரவி நின்றுகொண்டிருந்தார். குடிபோதையில் அங்கு வந்த சுந்தரம் ரவியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பு வரை சென்றது. இதனால் கோபமடைந்த சுந்தரம் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து எதிர்பாராத நேரத்தில் ரவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதை பார்த்த சிலர் சுந்தரத்தை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அருகில் வந்தவர்களையும் தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கற்களை சுந்தரத்தின் மீது வீசி அவரை விரட்டியுள்ளனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுந்தரம் மற்றும் ரவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுந்தரம் ரவியை வெட்டும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குடிபோதையில் நண்பனையே ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.