Tamilnadu

"ஓட்டுக்கு பணம் கொடுத்து வென்றார் ரவீந்திரநாத்" - குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க ஒரு தொகுதியில் மட்டும் வென்றது.

தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், ரவீந்திரநாத் குமாரின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனியைச் சேர்ந்த மிலானி என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்ததாகவும், அதற்குண்டான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளாது. மேலும், "வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற புகார் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது . ஆனால் தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் ஏன் தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தவில்லை" என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

”அதிகார துஷ்பிரயோகம் ,வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா போன்ற முறைகேடுகளை செய்தே ரவிந்தரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளார். எனவே இவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.