Tamilnadu

’முடி’ விழுந்த உணவு வழங்கியதற்காக சரவணபவனுக்கு 1 லட்சம் அபராதம் : நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி !

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சரவண பவன் உணவகம் செயல்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் சரவண பவன் உணவகத்தில் கடந்த 2014ம் ஆண்டு சாமி என்ற வழக்கறிஞர் சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவில் முடி இருந்துள்ளது. உடனே அந்த உணவைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, முடி இருந்ததை பற்றி மேலாளரிடம் தெரிவித்துள்ளார். மேலாளரும் அதற்குப் பதில் வேறு உணவை வழங்கியுள்ளார்.

அதனையடுத்து சிறிது நேரத்தில் சாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்த புகார் மனுவை நுகர்வோர் நீதிமன்றத்தில் கொடுத்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.

பின்னர் அந்த மனுவில், தான் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டது குறித்த ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார். அதில் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கும், தரமற்ற உணவை வழங்கியதற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என மனுவில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் சுகாதாரமற்ற உணவை விற்பனை செய்தக் குற்றத்திற்காகவும், வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.10,000 மற்றும் வழக்கு நடத்தியதற்காக 1 லட்சமும் மொத்தம் ரூ1.10 லட்சம் சரவணபவன் உணவகம் வழக்கறிஞர் சாமிக்கு வழங்கவேண்டும் உத்தரவிட்டுள்ளது.