Tamilnadu

வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தெரியாமல் ரூ.3,676 கோடியை திருப்பி அனுப்பிய எடப்பாடி அரசு... சி.ஏ.ஜி. தகவல்!

மத்திய அரசு கடந்த 2017-18ம் நிதியாண்டில் வழங்கிய நிதியில், 62% நிதியை பயன்படுத்தாமல் தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் கூட தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறமுடியவில்லை என சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பேசியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்த நிதியில் 62 சதவிகித நிதியை திருப்பி அனுப்பியிருந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2017-18ம் நிதியாண்டில் 5,920 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆனால், இந்த நிதியில் 3,676 கோடி ரூபாய் நிதியை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் எடப்பாடி அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஊரக வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பயனாளிகளை அடையாளம் காண முடியாததால் நிதி திருப்ப அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் எந்த துறையிலும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அரசியல் நோக்கர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.