Tamilnadu

‘ரூட்டு தல’ பிரச்னையில் ஈடுபட்ட 58 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் - அதிர்ச்சியில் மாணவர்கள்

சென்னையில் கடந்த வாரத்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் தொடர்பான செய்திகள் வெளியானது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் பட்டாகத்தியை வைத்து கொண்டு மற்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் மாணவர்களிடையே ரவுடிசம் அதிகரித்து வருவதைக் கண்ட போலிஸார், கைது செய்த மாணவர்களின் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்தும், அவர்கள் கைகள் உடைந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டும் மாணவர்களை எச்சரித்துள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் ரயில் மற்றும் பேருந்தில் ‘ரூட்டு தல’ பிரச்சனையில் ஈடுபடும் மாணவர்களை பிடித்து இனி தவறு செய்யமாட்டோம் என உறுதி மொழி ஏற்க வைத்தனர். இந்நிலையில், தற்போது பல்வேறு வழித்தடங்களில் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டு வரும் மாணவர்களை பிடித்து 58 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் மோதல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். மேலும் இதுபோல சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது இனி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படியே, 19 வழித்தடங்களில் ‘ரூட்டு தல’ பிரச்னை செய்யும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களில் 58 பேர் மீது 107 என்ற குற்றவியல் முறை சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரமாணப் பத்திரிகையிலும் நாங்கள் இனி இதுபோன்ற தவறுகளில் ஈடுபடமாட்டோம் என்றும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுவரை இதுபோன்ற மோதல்களின் மீது பெரிய நடவடிக்கை எடுக்காத போலிஸார், மாணவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கைது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், சிறை தண்டனை வழங்கப்போவதாகவும் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.