Tamilnadu
“ராஜராஜ சோழனுக்கு எல்லா சாதியிலும் உறவினர்கள் உண்டு” : மீண்டும் சர்ச்சையில் பா.ரஞ்சித் !
ராஜராஜ சோழன் குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது ராஜராஜனுக்கு பல்வேறு சாதிகளிலும் பேரன்கள் இருப்பதாக பேசியுள்ளார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்குனர் பா.ரஞ்சித்தின் ராஜராஜ சோழன் குறித்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது.
அங்கு பேசிய அவர், “தமிழகத்தில் சாதிக் கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில்தான். ராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்ட காலம்” என்றார். மேலும், தலித் மக்களுடைய நிலங்களை அபகரித்து தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டது என்றும் ராஜராஜ சோழன் பற்றி பா.ரஞ்சித் கூறிய கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்வினையாற்றினர்.
இதைத்தொடர்ந்து, அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ததும், நீதிமன்றத்தை நாடி முன் ஜாமின் பெற்றார் பா.ரஞ்சித். நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் உயிருடன் இருந்திருந்தால் தனது விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார் எனக் கூறியுள்ளார்.
மேலும், தான் பேசியதை ஒரு இடத்திலும் மறுக்கவில்லை என்றும், ராஜராஜன் குறித்த தன்னுடைய கருத்தில் இருந்து எப்போதும் பின்வாங்கப் போவதில்லை என்றும், இந்த விவகாரத்தில் யாருக்கும் பயப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் ரஞ்சித்.
மேலும் பேசிய அவர், தனது பேச்சால், இந்து தேசியம், தமிழ் தேசியம் பேசுபவர்களும், பல்வேறு சாதிகளில் உள்ள ராஜராஜனின் பேரன்களும், மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகச் சிரித்தபடி கூறினார் ரஞ்சித். நீதிமன்றம் எச்சரித்த பிறகும் ராஜராஜன் குறித்து அவர் பேசி வருவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!