Tamilnadu
தவறுதலாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் : கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் வழங்க உத்தரவு!
அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் தவறுதலாகச் செலுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து அந்த பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுக்கும் வகையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 45 நாட்கள் கடந்தபிறகு குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.
இதற்கிடையே, கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் ரூ. 10 லட்சமும், இரு குழந்தைகளின் பெயரில் ரூ. 15 லட்சமும் வங்கியில் செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுவந்த பின்பே தொகையை எடுக்க இயலும் வகையில் டெபாசிட் செய்யவேண்டும் என்றும் கூறினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 450 சதுர அடிக்கு குறையாமல் இரு படுக்கையறைகளைக் கொண்ட சுற்றுச்சுவருடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், மருத்துவமனை பணியிடங்களை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக நிபந்தனைகள் அடிப்படையில் நிரப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், ரத்த வங்கிகளை உரிய ஆய்வு செய்து கண்காணிக்கவும் ஆணையிட்டனர். அதோடு, ரத்தம் வழங்குதல், பெறுதல் நடவடிக்கைகளை பாதுகாப்பானதாக மேற்கொள்ள தமிழக அரசு வல்லுநர் குழுவை அமைக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!