Tamilnadu

மூச்சுக்கு முந்நூறு முறை ஜெயலலிதா ஆட்சி என்பது... ஆனால், விலையில்லா சைக்கிள் திட்டத்தை கைவிடுவதா?

அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் +1 மாணவிகளுக்கு 2001-2002ம் ஆண்டில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.

அதன் பின்னர், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இலவச சைக்கிள் திட்டம் மேம்படுத்தப்பட்டது. மாணவர்கள் கல்வி கற்க உதவிகரமாக அமைந்த இந்தத் திட்டம் தி.மு.க ஆட்சிக் காலங்களில் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மாநில பட்ஜெட்டில் இலவச சைக்கிள் திட்டத்துக்கு 2013-14-ல் ரூ.217 கோடியும், 2014-15-ல் ரூ.218 கோடியும், 2015-16-ம் ஆண்டில் ரூ.235 கோடியும், 2016-17-ல் ரூ.250 கோடியும் ஒதுக்கப்பட்டது எனவும், 2017-18ம் ஆண்டில் வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த கல்வி ஆண்டுகளில் அதிகளவில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் இந்த நிதியாண்டுக்கான கொள்கைவிளக்கக் குறிப்பில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மூச்சுக்கு முந்நூறு முறை ‘ஜெயலலிதாவின் ஆட்சி’, ‘அம்மாவின் ஆட்சி’ என்று வாய்ச்சவடால் விடும் எடப்பாடியின் அரசால், ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டத்தையே முழுமையாக செய்யமுடியவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.