Tamilnadu

வகுப்பறையிலேயே படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை : மதுரையில் பயங்கரம்!

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் குரு முனீஸ்வரன். இவரது மனைவி ரதிதேவி. இருவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹர்ஷவர்தன் (6) ஹர்ஷவர்த்தினி (6) என இரட்டை குழந்தைகள் உள்ளனர். தம்பதியர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர்.

ரதிதேவி, மதுரை மாவட்டம் சித்தனேந்தல் பகுதியில் தங்கியிருந்து, திருமங்கலத்தில் உள்ள பி.கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரதிதேவியை பார்ப்பதற்காக அவர் பணிபுரியும் பள்ளிக்கு நேற்று மதியம் அவரது கணவர் குரு முனீஸ்வரன் அங்கு வந்தார். வகுப்பறைக்கு வந்த அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த ரதிதேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது, அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக ரதிதேவியை குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த ரதிதேவி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்த குரு முனீஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பள்ளியில் நுழைந்து ஆசிரியையை அவரது கணவர் மாணவர்கள் முன்னிலையில் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.