Tamilnadu

கடல் சீற்றத்துக்கு வாய்ப்பு : மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (ஜூலை 22) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது :

“தென் தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

தேனி, கோவை, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்த பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார்.