Tamilnadu

தமிழக அரசின் நீட் மையத்தில் பயின்ற 19,000 அரசு பள்ளி மணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை - #realfact

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி ஆகியோர் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது மத்திய அரசு.

இதனை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டிய மாநில அரசோ மவுனம் சாதித்து வருகிறது, அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாக்கள், நிராகரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே தமிழகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதனை மறைத்து பா.ஜ.க.,விற்கு தனது விசுவாத்தைக் காட்டிவிட்டு தமிழக மாணவர்கள் நலன்களை பறித்துள்ளது.

மாநிலம் முழுவதும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர் கொள்ள கற்றுக் கொடுப்பதாக அ.தி.மு.க அரசு தம்பட்டம் அடித்தது. ஆனால் அ.தி.மு.க அரசு சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற 19,000 மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் மருத்துவ நிறுவனமும் (SPEED MEDICAL INSTITUTE) இணைந்து தமிழகம் முழுவதும் 412 சிறப்பு மையங்களை அமைத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளித்தது. ஆனால் இதில் ஒரு மாணவருக்கு கூட, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இந்தாண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் 474 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டை விட இந்த முறை நீட் தேர்வில் 300-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. போதிய அளவில் நீட் பயிற்சி அளிக்காததே, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் கிடைக்காததற்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி தொடங்கியது. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நிரம்பி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்த கீர்த்தனா என்கிற மாணவி இந்தாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவிக்கு மட்டும் அரசு ஒதுக்கீட்டு இடம் கிடைத்துள்ளது. அதுவும் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் மருத்துவக் கனவு சிதைந்துள்ளதாக மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.