Tamilnadu

மோசமாகும் சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை: என்னென்ன சிகிச்சை வழங்கப்படுகிறது என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சரவண பவன் ஊழியரான பிரின்ஸ் சாந்தகுமார் கடந்த 2001ல் கொல்லப்பட்ட வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஜூலை 7ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தனது உடல்நிலையை காரணம் காட்டி, சரணடைய கால அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்தார் ராஜகோபால். இதனை தள்ளுபடி செய்து உடனடியாக சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, கடந்த ஜூலை 9ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால் ஆம்புலன்ஸில் நீதிமன்றத்துக்கு வந்து சரணடைந்தார். பின்னர், சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கக் கோரி அவரது மகன் சரவணன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ராஜகோபாலுக்கு சர்க்கரை நோயினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் 4 இன்சுலின் போட வேண்டும்.

அது மட்டுமில்லாமல், கடந்த சில ஆண்டுகளாக தனியார் மருத்துவர்கள் வழங்கிய மருந்துகளை உட்கொண்டு வரும் ராஜகோபாலுக்கு தற்போது அரசு மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளை உட்கொள்வதால் அவரது உடல் மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளது.

எனவே தனது தந்தை ராஜகோபலை சென்னை வடபழனியில் அனைத்து மருத்துவ உபகரணங்களும் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீது நீதிபதிகள், சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் விசாரித்தனர். அப்போது மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை (ஜூலை 16) ஒத்திவைத்தனர்.