Tamilnadu

நடக்காத உள்ளாட்சித் தேர்தலுக்கு 61,039 ரூபாய் செலவுக் கணக்கு எழுதி பணம் திருட்டு: இது கோவை தில்லாலங்கடி !

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடைசியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் பதவிக்காலம் 2016 மே மாதத்துடன் நிறைவுபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்து இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், மாநிலத்தில் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. உள்ளாட்சி நிர்வாகத்தை தனி அலுவலர்கள்தான் கவனித்து வருகின்றனர். நீதிமன்றமே தலையிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க அரசு காலம் கடத்தி வருகிறது.

இந்நிலையில், 2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்ததாகவும், இதற்கான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் செலவு கணக்கு எழுதியுள்ளது. சமீபத்திய கணக்கு தணிக்கையின்போது இந்த குளறுபடிகள் தெரியவந்துள்ளது.

அதாவது, 2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வந்ததாக கூறி, போக்குவரத்து செலவு கணக்கு எழுதியுள்ளதுதான் இந்த பிரச்னைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த 7.1.2016 அன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து வர ரூ.2 ஆயிரத்து 727 ரூபாயும் அதனையடுத்து 1.12.2016 அன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து வர ரூ.2 ஆயிரமும், அதன்பிறகு 28.12.2016 அன்று மின்னணு வாக்குப்பதிவு எடுத்து வர ரூ.2 ஆயிரமும், மேலும் 28.3.2017 அன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து வர ரூ.54 ஆயிரத்து 312 என மொத்தம் 4 தேதிகளில் ரூ.61ஆயிரத்து 039 ரூபாய் செலவு செய்ததாக கணக்கு எழுதப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவல் மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியவந்த போது, இந்த தொகை அரசு கஜானாவுக்கு திரும்ப வரவேண்டும், இதற்கு பேரூராட்சி தனி அலுவலர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என மறைமுகமாக அறிக்கையில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமலேயே, பேரூராட்சி நிர்வாகம் செலவு கணக்கு எழுதியுள்ளது குறித்து பேரூராட்சி தனி அலுவலர் கேட்டபோது, இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு முன்பு இருந்த தனி அதிகாரி காலத்தில் இந்த செலவினம் நடந்துள்ளதாகவும் இதுதொடர்பான விசாரணை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இதுகுறித்து முழுமையான தகவலை அளிக்கவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்டம் தோறும் உள்ள அனைத்து அதிகாரிகளையும், விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் அரசு பணத்தை கையாடல் செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.