Tamilnadu
விபரீதத்தில் முடிந்த டிக்-டாக் தொடர்பு : கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்ட நர்ஸ் !
டிக்-டாக் செயலியால் சமூகத்தில் கலாசார சீர்கேடு எளிதில் நடைபெறுவதாகக் கோரி சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. அதில் அந்த செயலிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பிறகு நீக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் டிக் டாக் செயலி தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், டிக்-டாக் செயலி மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் நர்ஸ் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் தங்கி தொழிற்பயிற்சி படிப்பு படித்த தேனியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சமீப காலங்களாக டிக் டாக் செயலில் வீடியோக்களை அன்றாடம் பதிவிட்டு வந்துள்ளான். அச்சிறுவனின் வீடியோக்களை டூயட் செய்து தஞ்சையைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் டிக்-டாக்கில் பதிவிட்டிருந்தார்.
காலப்போக்கில் இருவரும் டிக்-டாக் மூலம் பழகியுள்ளனர். பின்னர் கடந்த அக்டோபர் மாதம் முதல் சிறுவனை காணவில்லை என சென்னை கிண்டி போலீசாரிடம் தந்தை புகாரளித்துள்ளார். அவரின் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் 4 முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பின்னர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அதில், சிறுவனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் அவர் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், தஞ்சையைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் சிறுவனுடன் பழகியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த நர்ஸிடம் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையும் இருந்தது.
இதனையடுத்து பெண்ணிடம் விசாரித்தபோது, வீட்டில் பார்த்த மணமகனை பிடிக்காமல் சென்னைக்கு தப்பி வந்ததாகவும், அங்கு டிக்-டாக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் தானும், அந்த சிறுவனும் திருமணம் செய்துகொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அந்தக் குழந்தை எங்கள் இருவருக்கும் பிறந்தது என்றும் குறிப்பிட்டார்.
பின்னர், மேஜராகாத சிறுவனுடன் திருமணம் செய்து கொண்டதால், பாலியல் வழக்குகளுக்கான போக்ஸோ சட்டம் மற்றும் ஆட்கடத்தல் சட்டத்தில் நர்ஸை சிறையில் அடைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுவனையும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!