Tamilnadu

பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 1,848 அரசுப் பள்ளிகள் : மூட முடிவு!?

தமிழகத்தில் 1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக கல்வித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள பள்ளி செல்லும் வயதுடையோர் அனைவரும் கல்வி பயிலவேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம் அனைத்துக் கிராமங்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. சமீபத்தில் கல்வித்துறை எடுத்த கணக்கெடுப்பில் 45 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை; 76 பள்ளிகளில் தலா ஒரு மாணவர்; 82 பள்ளிகளில் தலா 2 மாணவர்கள் என மொத்தம் 1,848 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்களே கல்வி பயின்று வருவது தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் விதிமுறைப்படி குறைவாக உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அருகிலுள்ள வேறு பள்ளிகளில் சேர்க்கவேண்டும் என கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஒரு மாணவர் கூட படிக்காத 4 பள்ளிகள் மூடப்பட்டதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்தார். மேலும், மாணவர்கள் வருகை எவ்வளவு குறைவாக இருந்தாலும் பள்ளிகள் மூடப்படமாட்டாது எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு அருகில் இருக்கும் வேறு அரசுப் பள்ளிகள் குறித்த தகவல்களைக் கேட்டிருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் கல்வியாளர்கள்.