Tamilnadu

காலனிய கருப்புச்சட்டத்தை இப்போது பயன்படுத்துவதன் அவசியம் என்ன? : திருமுருகன் காந்தி கேள்வி

தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

சென்னை சிறப்பு நீதிமன்ற வாயிலில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : “தமீழழப் படுகொலையில் இந்திய அரசு இலங்கைக்குத் துணை செய்திருக்கிறது என்பதை இளைஞர்களிடம் தொடர்ந்து கூறுவோம் எனச் சொன்னதற்காக வைகோ மீது தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகக் குரல்களை ஒடுக்குவதற்காக வெள்ளையர் அரசு கொண்டுவந்த சட்டப்பிரிவைப் பயன்படுத்தி சுதந்திரமடைந்த பிறகும், ஒடுக்கி வருவது அரசின் நேர்மையற்ற செயல்களில் ஒன்று.

இந்திய அரசின் சட்ட ஆணையம் இந்த 124 ஏ பிரிவை நீக்கப் பரிந்துரை செய்தபிறகும் கூட, இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுவது துரதிருஷ்ட வசமானது. இதுபோன்ற கருப்புச் சட்டங்கள் நீக்கப்படவேண்டும்.

இதே 124-ஏ பிரிவின் கீழ் பெரியாரின் இதழ் தடை செய்யப்பட்டது. அவரது கருத்துரிமை மறுக்கப்பட்டது. காலனிய ஆதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்தக் கருப்புச் சட்டத்தை இன்று வரை கடைப்பிடிக்கப்படுவதன் அவசியம் என்ன?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தண்டனையில் சலுகையினை கோரவில்லை. அதிகபட்ச தண்டனையை, ஆயுள் தண்டனையை அளிக்க வேண்டுமென்கிறேன். விடுதலைப்புலிகளை ஆதரித்தேன், இனிமேலும் ஆதரிப்பேன்” என வைகோ நீதிபதிடம் வாதிட்டார். எந்த தண்டனையைக் கொடுத்தாலும் ஈழத்தின் விடுதலையே தமிழர்களின் அரசியல் முழக்கம். அடக்குமுறையை எதிர்கொள்வோம்.” எனத் தெரிவித்தார் திருமுருகன் காந்தி.