Tamilnadu

சேலம் உருக்காலை : நீங்கள் தயார் என்றால், நாங்கள் உதவுகிறோம் - முதல்வருக்கு ஸ்டாலின் உறுதி

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதால் அதனை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், இது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், 1981ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையில் சேலத்தில் உருக்காலை அமைக்க திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு தலைவர் கலைஞர் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம். சேலம் அருகே உள்ள கஞ்சமலையில் இருந்து தாதுக்களை எடுத்து பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஆலை, பின்னர் விரிவாக்கத்தின்போது உருக்காலையாக மாற்றம் பெற்றது. தற்போது இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுபவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ஆலை மூலம் 8 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால், தற்போதைய மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை செயல்பாட்டால், இந்த ஆலை நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுத்துறையின் செயில் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்) நிறுவனத்திற்கு சொந்தமான சேலம் உருக்காலை, மேற்கு வங்கத்தில் உள்ள அலாய் இரும்பாலை, கர்நாடக மாநிலம் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பாலை ஆகிய 3 உருக்காலைகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

இதற்கு முன் மத்திய அரசு இது போல் தனியார்மயமாக்கும் திட்டங்களை கொண்டு வந்த போது தி.மு.க தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதுபோல அ.தி.மு.க இப்போது செயல்பட வேண்டும். தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரை சந்தித்து சேலம் உருக்காலை தனியார் மயமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

உங்களுக்கு உறுதுணையாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உங்களுடன் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள் அதற்கான உறுதியை இப்பொழுதே நான் தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.