Tamilnadu

நந்தினி திருமணத்தை நிறுத்த சேடிஸ்ட் மனப்பான்மையோடு தமிழக அரசு நடந்து கொள்கிறது : சி.பி.எம்

மது ஒழிப்பை வலியுறுத்தி கடும் சவால்களை எதிர்கொண்டு வருபவர் சமூகப் போராளி நந்தினி. அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.

தொடர் போராட்டங்களில் ஈடுபடும் நந்தினி 2014ல் டாஸ்மாக் கடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது ஜூன் 28ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் கைதுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றார்.

இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “மது ஒழிப்பு போராட்டம் உட்பட மிக முக்கியமான போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் மீது தொடர்ந்து தமிழக அரசு அடுக்கடுக்கான வழக்குகளை தொடுத்து ஜாமீனில் வெளி வராதபடி பதிவு செய்வது, கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மிக அத்யாவசியமான பிரச்சனைகளின் மீது போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, மது ஒழிப்பை வலியுறுத்தியும், தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வலியுறுத்தியும் தொடர்ந்து போராடிவரும் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். நீதிமன்றத்தில் ‘மது உணவுப்பொருளா?’ என்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார்.

இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மது ஒழிப்புக்காக பல்வேறு இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. மது உணவுப்பொருளா என்ற கேள்வி, சமூகத்தில் நிலவுகின்ற ஒன்றே.

நந்தினி திருமனம் வரும் ஜூலை 5 ஆம் தேதி நடக்கவுள்ள சூழலில், அவரை கைது செய்திருப்பது மிகுந்த வேதனை தருகிறது. தமிழக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும் இவ்வாறு சமூக அக்கறையுடன் போராடுபவர்கள் மீது வழக்கு தொடுப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது தமிழகத்தில் அமைதியற்ற சூழலுக்கே வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.