Tamilnadu

தொலைதூரக் கல்வியில் பட்டம் பெற லஞ்சம் : சிக்கிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்துறையில் போலியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் படிக்கும் 500 மாணவர்களிடம் 25 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பல்கலைக்கழக நிர்வாகம் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் வழங்கியது உறுதியானது. காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சோதனையின்போது கடந்த 2014-2015-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் எந்தவிதமான சுயகுறிப்புகளையும் தெரிவிக்காமல் புகைப்படம் மற்றும் முகவரியை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். அவர்களை தேர்வு எழுதச் செய்யாமல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் மோசடி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவருக்கும் முறைகேடாக போலிச் சான்றிதழ்களை வழங்க லட்சக்கணக்கில் தெரியவந்துள்ளது. அதன்படி கோடிக்கணக்கில் பணம் கைமாறிய இந்த விவகாரத்தில் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே கல்வியாண்டில் 500-க்கும் மேற்பட்டோருக்கு போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை தொலைதூர கல்வி திட்டத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.