Tamilnadu

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட: அமைச்சருக்கு திருமாவளவன் கடிதம்!

மத்திய அரசு தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடுகளை முறையாக வழங்கவில்லை என தொடர்ந்து புகார் எழுந்துவந்தது. தமிழக அரசிடம் பல முறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர் அமைப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய இட ஒதுக்கீடை முறையாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எம்.பி தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, "மருத்துவப் படிப்பில் எம்.பி.பி.எஸ். மற்றும் முதுநிலை படிப்பு ஆகியவற்றில் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழக்கின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் எம்.பி.பி.எஸ். இடங்கள் 490 அதில் 27% கணக்கிட்டால் 132 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அதுபோலவே பி.ஜி மருத்துவ படிப்புகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய தொகுப்புக்கு 879 இடங்கள் அளிக்கப்படுகின்றன. அதில் 27% கணக்கிட்டால் 237 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கவேண்டும்.

மத்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால் தமிழ்நாட்டில் மட்டும் 369 மாணவர்களின் வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் பறிக்கப்படுகிறது. இந்த அநீதியைக் களையவேண்டும் , பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்திய தொகுப்பு இடங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். எனக் அந்த கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதத்தை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் வி.சி.க பொதுச்செயலாளருமான துரை. ரவிக்குமாரும், மற்றும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இருவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தில் தனித்தனியே மனு அளித்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.