Tamilnadu

கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு முதன்முறையாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்கு 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 23,287 பேர் பெண்களும், 7,564 பேர் ஆண்களும் ஆவர்.

அதன்படி, தேர்வு நடைபெற்ற நெல்லை, சிவகங்கை, திருச்செங்கோடு உள்ளிட்ட சில பகுதிகளில் தொழில்நுட்பக் கோளாறால் தேர்வர்களால் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால், இதற்கான மறுதேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு நடைபெறும் தேதி, இடம் குறித்து இணையதளத்திலும், குறுஞ்செய்தி வாயிலாகவும் அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுமிதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "தேர்வு நடைபெற்ற நாளில் பல தேர்வு மையங்களில் இணையதள சேவையில் பிரச்சனை ஏற்பட்டது. முறையான கண்காணிப்பு இல்லாமல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் தகுதியற்றவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே குளறுபடி நடந்த 3 மையங்களில் மட்டும் நடத்தப்படவுள்ள மறுதேர்வை ரத்து செய்யவேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் மறு தேர்வு நடத்த உத்தரவு அளிக்கவேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், மனுதாரர் புதிதாக புகாரளிக்கவும், அதனை விசாரித்து ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.