Tamilnadu

காதலியின் கண்முன்னே வெட்டப்பட்ட காதலன் : தமிழகத்தில் மீண்டும் ஓர் ஆணவப் படுகொலை ? 

கோவையில் கனகராஜ் என்ற வாலிபர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தர்சினி பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் இவர் அதே பகுதியைச் சேர்ந்த தர்சினி பிரியா என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், பெற்றோரின் எதிர்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

காதல் விவகாரத்தில் ஆத்திரத்தில் இருந்த கனகராஜின் சகோதரர், இன்று மாலை இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில், காதலன் கனகராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலி தர்சினி பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சாதி ஆணவப்படுகொலை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது எனவும், முன்பே கனகராஜும் - தர்சினி பிரியாவும் திருமணம் செய்துகொண்டால் வெட்டி ஆற்றில் வீசுவோம் என கனகராஜின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக தர்சினி பிரியாவின் பெற்றோரும் அவரது உறவினர்களும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலிஸார் விசாரித்து வருகின்றனர்.