Tamilnadu

தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவீங்களா? : கேரள அரசுக்கு கடிதம் எழுதும் எடப்பாடி !

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீர் பஞ்சம் பெருமளவு மக்களை பாதித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் குடிநீருக்காக வீதி வீதியாக அலைந்து வருகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இதுவரை ஆளும் அ.தி.மு.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் சிரமத்தை உணர்ந்து கொள்ளாமல் முதல்வரும், அமைச்சர்களும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்கிற அளவில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று வெளியிட்டிருந்த பேஸ்புக் பதிவில், தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர முன்வந்ததாகவும், ஆனால் தமிழகத்தில் தண்ணீர் போதுமான அளவு இருக்கிறது. அதனால், எந்த உதவியும் தங்களுக்குத் தேவையில்லை என்று தமிழக அரசு மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்கப்படுவது குறித்து செய்தி பத்திரிகைகளில் நேற்று வெளியானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனை அறிந்த எடப்பாடி இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

அதில் அவர் பேசுகையில், “தமிழகத்தில் தண்ணீ ர் பிரச்னையைத் தீர்க்க அரசு முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறது. லாரிகள் குறைவாக இருப்பதால் விநியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டுள்ளது. மற்றபடி, தண்ணீர் பிரச்னை எதுவும் இல்லை” என்று தண்ணீர் லாரி சங்க நிர்வாகி போல பேட்டியளித்தார்.

கேரள அரசு தண்ணீர் வழங்க முன் வந்தது குறித்த பத்திரிகையாளர்கள் கேள்விக்கு, “அதுபோல் நடந்திருந்தால் வருந்துகிறோம். தமிழகத்திற்கு தண்ணீர் தேவை உள்ளது. அதனால், தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கேட்டு கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளோம்” என்று பதிலளித்தார். இவரது பதிலைக்கேட்ட பத்திரிகையாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.