Tamilnadu

குடிநீர் தட்டுப்பாட்டால் அரை நாள் மட்டுமே இயங்கும் தனியார் பள்ளிகள்: வேதனையில் பெற்றோர்கள்

தமிழகம் முழுவதும் தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைக்கின்றனர். கிராமங்கள் மட்டுமல்லாது, சென்னை போன்ற பெரிய நகரமும் தண்ணீர் இன்றி தவித்துவருகிறது. சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் வலுயுறுத்தியுள்ளனர். மேலும் சென்னையில் பல இடங்களில் உணவகம் மூடப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இப்படி எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை என்பது போல் ஆளும் அ.தி.மு.க அரசின் அமைச்சர்கள் செய்தியாளர்களிடையே பேட்டியளிக்கின்றனர். இது பொதுமக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல பள்ளிகளிகளில் தண்ணீர் இல்லாததால் மூடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள தனியார் பள்ளி அறிவிப்பு பலகையில்,“இன்று முதல் அடுத்தமாதம் 5ம் தேதி வரை 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக பல இடங்களில் தொடந்து பள்ளிகளை இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தினர் நேற்றைய தினம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.