Tamilnadu

“இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியா?” : புதிய பாடப்புத்தகங்களில் ஏகப்பட்ட குளறுபடிகள்!

நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு புதிய பாடப் புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆட்சி மொழிகளாக இந்தி, ஆங்கிலம் ஆகியவை உள்ளன. இந்நிலையில் 7-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என அச்சிடப்பட்டுள்ளது. அந்தப் பாடப் புத்தகத்தின் 210-வது பக்கத்தில் மொழி தொடர்பான பாடம் இடம்பெற்றுள்ளது.

அதில் இந்தியா பலவகையான மொழிகளைக் கொண்ட நாடு என்றும், இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்திலும் குளறுபடிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக அச்சடித்து வழங்கப்பட்டுள்ள ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'நாட்டுப்பண்' எழுத்துப் பிழைகளுடன் தவறாக அச்சிடப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “ஜன கண மன" என தொடங்கும் நாட்டுப்பண்ணில் பல வார்த்தைகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளது.

அதன்படி, திராவிட உத்கல வங்கா என்ற வரியில் வங்கா என்பதற்கு பதில் பங்கா எனவும், உச்சல ஜலதி தரங்கா என்ற வரியில் ஜலதி என்பதற்கு பதில் சலதி எனவும் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும், ஜன கண மங்கள தாயக ஜெயகே என்ற வரிக்குப் பதில் பாடலின் முதல் வரியான “ஜன கண மன அதிநாயக ஜய ஹே” என்பதே மீண்டும் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு புதிதாக மாணவர்கள் தெரிந்துகொள்ளும் முக்கிய பாடத்திட்டத்திலேயே இவ்வளவு தவறான தகவல்கள் இருந்தால் வரலாறு குறித்து அவர்களால் எப்படிச் சரிவரத் தெரிந்துள்ள முடியும்?

புதிய பாடத்திட்டத்தின்படி பாடப் புத்தகங்களை அச்சடிப்பதில் தோல்வியடைந்த தமிழக அரசு அவசர அவசரமாக அச்சடித்ததே இந்தத் தவறுகளுக்கு காரணம் என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.