Tamilnadu

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் : மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!

மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் , “நேரடியாக இந்தியையும் ,மறைமுகமாக சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியாக இந்த புதிய தேசிய கல்வி கொள்கையை அமைத்துள்ளனர். தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் ஏழை எளிய மாணவர்களும் பாதிக்கும்படியாக இந்த கல்விக் கொள்கை இருக்கிறது. குலக்கல்வி முறையை அறிமுகம் செய்ய முனைப்போடு இந்த வரைவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

முறையான அறிவிப்புகள் இல்லாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்ட இந்த புதிய தேசிய கல்விக்கொள்கையை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும். கஸ்தூரிரங்கன் குழுவின் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 சமூக நீதிக்கும் சம உரிமைக்கும் எதிராக இருப்பதாலும் கல்வித் துறையில் வளர்ச்சி பாதையில் இருக்கவேண்டிய தமிழகத்தின் உரிமைகளுக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளதாலும் இந்த வரைவினை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவாதிப்பதற்காக ஜூன் 22-ம் தேதி போடப்பட்டுள்ள கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளனர் .

விவாதத்துக்கு உட்படுத்தாமல் அவசரகதியில் இந்த புதிய வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜனநாயக ரீதியில் இதுவரை எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் நீர்த்துப் போகச் செய்து விடும். ஆகையால், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை கேட்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் .குறைந்தது ஆறு மாத காலம் இந்த வரைவு குறித்து விவாதம் செய்ய வேண்டும்" இவ்வாறு கூறினர்.