Tamilnadu

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் மூடப்படும் மேன்சன்கள் !

வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாட்டை தலைநகர் சென்னை சந்தித்துள்ள நிலையில், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் சில உணவகங்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தண்ணீர் பிரச்சனையால் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மேன்சன்கள் அனைத்தும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி அதனை சுற்றியுள்ள ஒரு சில மேன்சன்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அங்கு தங்கி இருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், மேன்சன் உரிமையாளர்களும், அங்கு தங்கியிருப்பவர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் அனைத்து மேன்சன்களையும் இழுத்து மூடும் நிலை உருவாகும் என்றும் அங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.