Tamilnadu

தோல்வி விரக்தியால் அரசு ஊழியர்களிடம் வெறுப்பைக் காட்டிய அமைச்சர்!

நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி தோல்வியுற்ற நிலையில், அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்காத மக்கள் மீது தங்கள் வெறுப்பைக் காட்டி வருகின்றனர் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கடந்த ஜனவரி மாதம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு ஒடுக்க முயற்சித்தது.

இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் தபால் வாக்குகளில் கிட்டத்தட்ட 80% தி.மு.க கூட்டணிக்கே விழுந்ததால் அரசு ஊழியர்கள் மீது ஆளுங்கட்சியினர் வெறுப்பைக் காட்டி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியன், 32 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்து மிகவும் நேர்மையாகப் பணியாற்றியவர். அவர் ஓய்வுபெறவிருக்கும் நிலையில் திடீரென பணியிடைநீக்கம் செய்து பழிவாங்கியது ஆளுங்கட்சி.

இந்நிலையில், ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் சிலர் ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து போராட்டின்போது போடப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற வலியுறுத்தினர்.

அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், “அரசு ஊழியர்கள் எல்லோரும் தி.மு.க-விற்கு வாக்களித்தீர்களே.. பிறகு எதற்கு எங்களிடம் வந்து நிற்கிறீர்கள். நீங்கள் ஜெயிக்கவைத்தவர்களிடமே போய் முறையிட வேண்டியதுதானே” எனக் கோபமாகப் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அ.தி.மு.க அரசு மீது கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.