Tamilnadu

தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாமணி. இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவராகவும் இருந்து வந்தார். தமிழக சட்ட சபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிறிய காலம் வீட்டில் ஓய்வு எடுத்துவந்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமான காரணத்தால் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 14) அதிகாலை 5 மனியளவில் உயிரிழந்தார். தகவலறிந்து விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ராதாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ராதாமணி உயிரிழந்த செய்தி அறிந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுச்சேரி சென்று ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள ராதாமணி எம்.எல்.ஏ.வின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் ராதாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.