Tamilnadu

குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். அதில், "கடந்த மார்ச் மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை நடத்தியது. இதில் 1 லட்சத்து 68 ஆயிரம்பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3 ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 9050 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

தேர்வானவர்களின் பெயர், பாலினம், பிரிவு என எந்த தகவலும் தரப்படவில்லை. கட் ஆஃப் மதிப்பெண்ணும் வெளியிடப்படவில்லை. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18 கேள்விகள் தவறு. வெளிப்படைத்தன்மை இல்லாமல் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எனவே, குரூப் 1 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி பார்த்தீபன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வில் இடம்பெற்ற 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானது என ஒப்புக்கொண்டார். இது குறித்து விளக்கமளிக்க கால அவகாசம் தேவை எனவும் முறையிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, "வினாத்தாள் தவறினால் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வு எழுதிய 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 சதவீத கேள்விகளில் குளறுபடிகள் இருந்தாலே தேர்வை ரத்து செய்யலாம் என்கின்ற விதி உள்ளது. ஆனால், தற்பொழுது 20 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் தவறு நடந்துள்ளது. எனவே, இந்த மனுவுக்கு டி.என்.பி.எஸ்.சி பதில் தர உத்தரவிடுகிறேன்” என்று கூறி விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தார்.