Tamilnadu

குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு !

நாமக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய அமுதவல்லி, பிறந்த குழந்தைகளை போலி பிறப்பு சான்று தாயரித்து கடந்த 30 ஆண்டுகளாக விற்பனை செய்வதாக ரமேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நாமக்கல் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி கைது செய்யப்பட்ட அருள்சாமி, ரேகா, நந்தகுமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அதில் குழந்தை விற்பனை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், தங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகள் மனுதாரர்கள் மீது கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.