Tamilnadu

8 வழிச்சாலையை அமைக்க துடிக்கும் எடப்பாடி பழனிசாமி: விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு!

சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த தடையை உச்ச நீதிமன்றம் அண்மையில் உறுதிசெய்தது.

இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எட்டுவழிச்சாலை தொடர்பான வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் முதலமைச்சர் பேசியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த சாலைகள் அமைக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே எட்டுவழிச்சாலை அமைக்க எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார் என்றும் விவசாயிகள் சாடியுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினர்.