Tamilnadu

மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு மேற்க்கொண்ட அதிகாரி பணியிட மாற்றம்? தமிழக அரசு உத்தரவு!

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலை பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். கோவில் நிகழ்ச்சியின் போது மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதனைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் இல்லை என புகார் எழுந்தாது. கோவில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியாக இயங்கி வருகிறது.

எனவே இந்த கோவிலை அறநிலையத்துறை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் நான்கு பேர் குழு அமைக்கப்பட்டது. அதிகாரிகள் குழுவினர் மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு செய்ய சென்றனர். அவர்கள் அறநிலையத் துறையின் உத்தரவு நகலை கோவில் ஊழியர்களிடம் காண்பித்து ஆய்வு செய்ய முயற்சித்தனர்.

இதற்கு கோவில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் கோவிலில் இருந்து வெளியேறினர். இதுபற்றி உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்தியது தொடர்பாக வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அறநிலையத்துறையின் அனுமதியில்லாமல் மேல்மருவத்தூரில் ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் பொது நலன் கருதி வேலூர் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலை சிவகங்கை அறநிலையத்துறை இணை ஆணையராக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் அரசு அதிகாரிகளிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது. பணியை மேற்கொண்டதற்காக பணி மாறுதல் நடவடிக்கை எற்புதல் அல்ல என அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.