Tamilnadu

இனி ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து, வாகனங்கள் பறிமுதல் - உயர்நீதிமன்றம் 

மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்தக் அரசுக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர், மற்றும் சென்னை கிழக்குன மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நீதிபதிகள், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயனிப்பவர்கள் ஒருவர்கூட ஹெல்மெட் அணிவதில்லை, எனவும், டெல்லி பெங்களூரில் பேன்ற நகரங்களில் அமல்படுத்தும் போது ஏன் தமிழகத்தில் அமல்படுத்த முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு உரிய முறையில் அமல்படுத்துவதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த 6 மாதங்களில் ஹெல்மெட் அணியதாதது தொடர்பாக 4 லட்சம் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஹெல்மெட் அணியாமல் பயனிப்பவர்களிடம் இருந்து 100 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை அதிகரிப்பது தொடர்பான சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீண்டும் நடைமுறைபடுத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மோட்டார் வாகனசட்ட விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகின்றன அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார்.

அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் காவல்துறையினர் கூட ஹெல்மெட் அணியாமல் சென்று உயிரிழப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் பயணித்தால் அவர்களை பணி இடை நீக்கம் செய்யப்படுகின்றனர் என தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தல், ஓட்டுநர் உரிமம் ரத்து, ஹெல்மெட் கட்டாயமாக்கி பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் புதன்கிழமை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.