Tamilnadu

ராஜீவ் வழக்கு : பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து நான்கு வாரத்தில் முடிவு !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் அவர்கள் 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தண்டனை காலத்துக்கு மேல் சிறையில் இருப்பதால் தங்களை விடுவிடுக்குமாறு ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துவிட்டது.

இதையடுத்து ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைத்தது. அந்த தீர்மானம் அனுப்பு ஓராண்டாகியும் இன்னும் அதன் மேல் எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுக்கவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி 2012-ஆம் ஆண்டு ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏழு பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் கவர்னரிடம் நிலுவையில் உள்ளதாகவும், தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வார அவகாசம் தேவை எனவும் தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்று விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக உள்துறை செயலாளரிடம் கொடுக்கப்பட்ட மனுவை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதனையடுத்து விசாரணையை நீதிபதிகள் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

நளினி மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோரின் விடுதலை குறித்து வழக்கு வெவ்வேறு நீதிமன்ற அமர்வுகளின் கீழ் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பு 2 வாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை குறித்து தெரியவரும் என்று பதில் அளித்தது. அதேபோல நளினி தொடர்ந்த வழக்கும் 4 வாரத்துக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. எனவே இவ்விரு வழக்குகளின் அடுத்த அமர்வில் ஏழு பேர் விடுதலை குறித்து முக்கிய முடிவு வாரத்தில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.