Tamilnadu

அணுக்குப்பைகளின் கிடங்காகிறதா தமிழகம்?: அணுக்கழிவு மையம் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் அமையவுள்ளது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை மையத்தில் 1,000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படும் யுரேனியம் பயன்பாட்டுக்குப் பிறகு, புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்கு கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது.

அணுக் கழிவுகளைக் கடலில் கொட்டினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, மீன்வளமும் பாதிக்கும் என்பதால், அணு உலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவுகள், உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு 'Away From Reactor' எனப்படும் அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படவுள்ளது.

இந்த மையத்தில் கழிவுகளை சேமித்து வைக்கக்கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக, கடந்த 2012-ம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

பல்வேறு நிபந்தனைகளுடன் அணு உலை செயல்பட அனுமதியளித்த உச்சநீதிமன்றம், அணுக்கழிவுகளை பாதுக்காப்பாக வைப்பதற்கான மையத்தை 5 ஆண்டுகளில் உருவாக்க உத்தரவிட்டிருந்தது.

கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் கோரியது இந்திய அணுமின் சக்தி கழகம். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கியது.

இந்தநிலையில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஜூலை 10-ம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.