Tamilnadu

பயணிகளின் தாகம் தணிக்கும் அரசு பேருந்து நடத்துநர்- மனிதாபிமானத்துக்கு குவியும் பாராட்டுகள்

கோடை காலம் தொடங்கியது முதல், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கிடையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் பணி நிமித்தமாக பகல் நேரங்களில் வெளியே செல்பவர்களே கடும் வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் முற்றிலும் சோர்வடைகின்றனர். வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தாலும் அதனால் எந்த பயனும் கிட்டுவதில்லை என்ற புலம்பல்களும் மக்களிடையே கேட்கப்பெறலாம்.

தொலைதூரம் பேருந்துகளில் செல்பவர்கள், அதிகபட்சமாக ஒரு பாட்டிலில் மட்டுமே தண்ணீரை எடுத்துச் செல்வதால், பயணித்தின் போது தாகம் ஏற்பட்டால் வேறெங்கும் இறங்கி தண்ணீர் வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், மதுரை - தஞ்சாவூர் அரசு பேருந்தில் பயணிக்கும் மக்களுக்காக, ஒன்று முதல் 2 லிட்டர் கேன்களில் தண்ணீரை நிரப்பி இலவசமாக வழங்கி வருகிறார் சிவகங்கை திருபுவனத்தைச் சேர்ந்த நடத்துநர் திருஞானம்.

மதுரை - தஞ்சாவூr இடையேயான 4 மணிநேர பயணத்தில் பயணிகள் குடிக்க தண்ணீர் இன்றி அவதியுற வேண்டாம் என்பதால் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் நடத்துநர் திருஞானம்.

இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய அளவில் பயன்பெறுகின்றனர். மேலும், இலவச தண்ணீர் சேவையில் ஈடுபட்டு வரும் நடத்துநர் திருஞானத்துக்கும் பாராட்டுகளை குவிந்து வருகின்றது.