Tamilnadu

பா.ஜ.க.,வில் இணைந்ததற்காக இளைஞரைக் வெட்டிக் கொன்ற உறவினர்? போலீஸார் தீவிர விசாரணை

கோவையில் குமாரசாமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார். இவர் மந்திர பூஜைகள், ஜோதிடம் போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார்.

சந்தோஷ் குமார் 2 நாட்களுக்கு முன்பாக வீரகேரளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை பின்தொடர்ந்து வாகனத்தில் துரத்தி வந்துள்ளனர். தப்பிக்க முயன்ற சந்தோஷ் குமாரின் வாகனத்தை எட்டி உதைத்து அவரை கீழே தள்ளியுள்ளனர். நிலைதடுமாறில் கீழே விழுந்த சந்தோஷை அந்த நபர்கள் கழுத்தில் கத்தியால் குத்தி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட சந்தோஷ் குமார் அந்தவழியாக வந்த நபரின் வாகனத்தில் ஏறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே மயங்கிவிழந்த அவர் பரிதாபமாக உயிழந்தார். பின்னர் காவல்துறையினர் அங்குவந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சந்தோஷ் குமாரின் சித்தப்பா மற்றும் சந்தோஷ் குமார் இருவரும் இந்தியக் குடியரசுக் கட்சியில் இருந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் குமார் குடியரசுக் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார். சந்தோஷ் குமார் பா.ஜ.க.,வில் சேர்ந்தது பிடிக்காமல் அவரின் சித்தப்பாவே கொலை செய்திருக்கலாம் என்று அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி வருவதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சந்தோஷ் குமார் மீது அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.